பத்திரப்பதிவுக்கு செல்லும் போது இதையும் கொஞ்சம் திட்டமிடுங்கள்!

வீடு, மனை வாங்கும் போது அதற்கான பத்திரப்பதிவை மேற்கொள்வதில் பல்வேறு விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும்.

தற்போதைய நிலவரப்படி, சொத்து விற்பனையின் போது, அதன் மதிப்பில், ஏழு சதவீதம் முத்திரைத்தீர்வையாகவும், நான்கு சதவீதத்தை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணங்களை மதிப்பீடு செய்து அத்தொகைக்கு முத்திரைத்தாள்கள் வைப்பது பல ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது.

தற்போது சொத்து மதிப்புகள் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், சில இடங்களில் இரண்டு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை இத்தொகை வருகிறது.

இத்தொகையில், 50,000 ரூபாய் அளவுக்கு முத்திரைத்தாள்களை வாங்கிக்கொண்டு மீதி தொகையை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

முத்திரைத்தீர்வை, பதிவு கட்டணத்தின் மொத்த தொகையையும் ஆன்லைன் முறையில் வங்கியில் செலுத்தலாம் அல்லது இ ஸ்டாம்பிங் முறையில் செலுத்தலாம்.

பதிவுக்கான பத்திரத்தை தயாரிப்பதில் பெரும்பாலான ஆவண எழுத்தர்கள் தங்கள் பணியை சுருக்கமாக முடித்துக்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

இதற்காக பத்திரத்தின் பக்கங்களை குறைப்பது, அதில் இடம் பெற வேண்டிய விபரங்களை குறைத்துக்கொள்வது போன்ற வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

உங்களுக்கான பத்திரத்தில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆவண எழுத்தர் கூறும் காரணங்கள் ஏற்க தக்கதாக இல்லை என்றால், நேரடியாக சார்-பதிவாளரை சந்தித்து தெளிவு பெறலாம்.

பத்திர தயாரிப்பு நிலையில் ஏற்படும் சந்தேகங்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகலாம் அல்லது பதிவுத்துறையின் வழிகாட்டி மையத்தை அணுகி தெளிவு பெறலாம்.