வலி, வீக்கத்தை குறைக்கும் வில்வம்!

வில்வத்தில் ஏஜிலைன், மார்மின், மார்மிலோசில் போன்ற மருத்துவ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என, அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வில்வ இலையில் துவர்ப்பு சத்து அதிகம். வில்வ இலையை வதக்கி, வீக்கங்களுக்கு கட்டினால், வலி மற்றும் வீக்கம் குறையும்.

மேலும், இதை கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தால், கண் சிவப்பு, வலி, வீக்கம் குறையும். வில்வ இலையை அரைத்து, 10 மி.லி., அளவு எடுத்து, 50 மி.லி., தயிரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் புற்றுநோயை வில்வ இலைச் சாறு குணப்படுத்துகிறது. வயிற்று சவ்வுகளில் உள்ள புண்களை ஆற்றும் அற்புத சக்தி வில்வத்திற்கு உண்டு.

ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், நீரிழிவு பாதிப்புக்கான மருந்துகளில் வில்வம் அதிகம் சேர்க்கப்படுகிறது.

வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.

வில்வ காயை வெயிலில் காய வைத்து, அதை எரித்து கரியாக்கி, பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உண்டாகும் நோய்களை போக்கும்.

வில்வ மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து, வடி கட்டி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கலாம். இது, எல்லாவித காய்ச்சல்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்.