8 பெண்களில் ஒருவருக்கு பாலியல் தொல்லை... யுனிசெப் அதிர்ச்சி தகவல் !

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அக்., 11ல் அனுசரிக்கப்பட்ட நிலையில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை யுனிசெப் அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், 'உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என 37 கோடி பேர் (அதாவது 8 ல் ஒருவர்) பாலியல் பலாத்காரம் அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்' என கூறப்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுமிகளில் பெரும்பாலானோர் வயது 14 முதல் 17 வரை தான் உள்ளது.

இந்த சித்ரவதையால் பாதிக்கப்படும் சிறுமிகள் மீண்டும் அதே போன்றதொரு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இதனால் சிறுமிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கு இருக்கிறது.

மன அழுத்தம், மன சோர்வு ஆகியவற்றால் அவதிப்படுகின்றனர். பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள், போதைப்பொருள் துஷ்பிரயோகம் ஆகியவற்றாலும் அவதிப்படுகின்றனர்.

தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெளியில் கூறாத சிறுமிகள் மற்றும் பெண்கள் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது.

பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என உலகளவில் 24 முதல் 31 கோடி பேர் குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர்.

இணையவழியில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் 53 கோடி என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.