இன்று தேசிய முந்திரி தினம் !
அனாகார்டியசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது முந்திரி மரம். இது, 46 அடி வரை வளரும். இதன் பழம், பூவின் சூலகப் பகுதியில் உருவாவதில்லை; அடிப்பகுதியில் காம்பு தடித்து புடைத்து உருவாகிறது.
இதை, முந்திரி ஆப்பிள் என அழைப்பர். இதன் அடிப்பகுதியில், வலுவான ஓட்டுடன் இருப்பதே உண்மையான பழம். அதன் உள்ளிருக்கும் பருப்பு தான் உண்ணத் தகுந்தது.
தென் அமெரிக்க நாடான பிரேசில் இதன் தாயகம். இந்தியாவுக்கு, போர்த்துகீசிய மாலுமிகள் முந்திரி விதையை, 1565ல் எடுத்து வந்தனர். மேற்கு ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவில் அதிகம் உற்பத்தியாகிறது.
முந்திரி பருப்பில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இனிப்பு வகைகள், பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளில் சேர்க்கப்படுகிறது. சுவையுடன் உடலுக்கு நன்மையும் பயக்கும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும்.
முந்திரியில், மெக்னீஷியம், தாமிரம், மாங்கனீஸ், துத்தநாகம், பொட்டாஷியம், செலினியம் தாதுக்கள் அதிகமுள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கின்றன.
முந்திரி பழத்தில், புரோட்டீன், பீட்டா -கரோட்டீன், டானின் என்ற ஆன்டி- ஆக்ஸிடன்ட், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
உலகளவில், 2023ல், 10.95 கோடி கிலோ முந்திரி பருப்பு உற்பத்தியானதாக புள்ளி விபரம் கூறுகிறது. முந்திரி விதையின் ஓடு, இரண்டாம் உலகப் போரில் ஆயுதங்கள் உற்பத்தி செய்ய பயன்பட்டது.
முந்திரி விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தேசிய முந்திரி தினம், இன்று (நவ., 23) கடைபிடிக்கப்படுகிறது.