மூளை தின்னும் அமீபா...சரியான நேரத்தில் சிகிச்சை அவசியம் !
சுகாதாரமற்ற நீரில் குளிக்கும்போது, 'நிக்லேரியா பவுலேரி' என்ற அமீபா நுண்ணுயிரி, சுவாசப்பாதை வழியே ஊடுருவி, அரிதான மூளை காய்ச்சல் நோயை ஏற்படுத்துகிறது.
தீவிர காய்ச்சல், அடங்காத தலைவலி என ஆரம்பித்து, கழுத்து பகுதி இறுக்கம், குமட்டல், வாந்தி, தலைசுற்றல், வலிப்பு ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த அமீபா, நரம்புகளின் நியூரான்களை தின்று உயிர் வாழும் என்பதால், மூளையையும் சிறுக சிறுக உணவாக உட்கொள்ளும்.
இதனால், பேதலிப்பு நிலை, மூர்ச்சை நிலை ஏற்பட்டு, கோமா மற்றும் உயிரிழப்பு ஏற்படும். பெரும்பாலும், நோய் பாதித்த ஒரு வாரத்திற்குள் உயிரிழப்பை ஏற்படுத்தி விடும்.
மூளை அயற்சியை ஏற்படுத்தி, உயிரை கொல்லும் அமீபா நோய் பாதிப்பு, கேரளாவில் பெரும் சவாலாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொற்றுநோய் இல்லை என்றாலும், நீர்நிலைகள் வாயிலாக பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே, மாசடைந்த குளம், குட்டை போன்ற நீர்நிலைகள், பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களில் குளிப்பதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அறிவுருத்தியுள்ளது.
அமீபா, நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு கட்டுப்படாது. இதற்கான பிரத்யேக மருந்தாக, 'ஆம்போடெரிசின் - பி' உள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளித்தால் குணப்படுத்தலாம்.
தமிழகத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட, 47 வயது நபர், சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு, மருத்துவமனையில் குணப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், 100 % உயிர் பிழைப்பதில் சிக்கல் ஏற்படும்.
இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என்பதால், அச்சப்பட வேண்டாம் என, அரசு மருத்துவமனை பொதுநல டாக்டர் பரூக் அப்துல்லா அறிவுருத்தியுள்ளார்.