வீட்டில் வளர்ப்பதற்கேற்ற சில மரங்கள்...
வீட்டைச் சுற்றிலும் போதுமான இடம் இருந்தால், செடிகள் வளர்ப்பதை விட மரங்கள் வளர்ப்பது நல்லது. சுவையான பழங்களை மட்டுமின்றி, சுத்தமான காற்று, நிழலை இவைத் தருகிறது.
மரங்களை வளர்ப்பதால் வீட்டையும் பசுமையாக்கலாம். ஆனால், வேர்கள் வீட்டின் அடிவாரத்தை ஊடுருவாமல் பார்க்க வேண்டும். எனவே, வீட்டில் வளர்ப்பதற்கேற்ற சில மரங்களைப் பார்க்கலாம்.
பப்பாளி மரத்தை எளிமையாக வளர்க்கலாம். காய்த்துக்கொண்டே இருக்கும். மற்ற மரங்களை விட இதனை எளிதாக வளர்க்கலாம். பப்பாளியில் சுவையும், சத்துக்களும் அதிகம்.
மாதுளை... சிறுமரம். சத்து, சுவை, நிறம் அனைத்திலுமே அடித்துக்கொள்ள முடியாது. இதன் பூ பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.
சீதாப்பழங்கள் அதிக இனிப்பு சுவை கொண்டவை. குளிர்ச்சியை உண்டாக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டுள்ளது.
அரிநெல்லியோ, மலைநெல்லியோ எது வேண்டுமானாலும் வளர்க்கலாம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிடுங்கள் என்பது டாக்டர்களின் அட்வைஸ் ஆகும்.
வேம்பு நம் நாட்டின் தலைசிறந்த மரம். அடர்ந்த நிழல், குளுமையான காற்று, மருத்துவம் என அனைத்திலும் முதலிடம் வேம்பிற்கே. வீட்டின் முன்புறம் வளர்க்க சிறந்த மரம்.
உலகின் மிகுந்த அழகான மரங்களில் செம்மயில்கொன்றையும் ஒன்று. மே மாதங்களில் மரமே நெருப்பு போல காட்சியளிக்கும்.
மரமல்லி... இதன் மலர்கள் மணம் ஊரெங்கும் வீசக்கூடியது. உயரமாக வளரக்கூடியது. இடமிருந்தால் வளர்க்கலாம்.