உஷார்... வாரத்துக்கு ஐந்து மணி நேரமாவது உடல் உழைப்பு இருக்கணும்!

இந்தியாவில் பாதி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாததால், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள உடற்தகுதியை பெறவில்லை என்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் வயது வந்தவர்கள் மத்தியில் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2022ல் 49.4 சதவீதமாக உள்ளது. அதில், பெண்கள் 57 சதவீதம் பேர். ஆண்கள் 49 சதவீதம் பேர்.

உடல் உழைப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2000 ல் 22.4 சதவீதமாக இருந்தது. இது குறித்து 195 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது.

இது சரி செய்யப்படாமல் இருந்தால், 2030 ல் 59.9 சதவீதம் பேர் போதிய உடற்தகுதி இல்லாமல் இருப்பார்கள். இதனால், உடல்நலக்குறைவு மற்றும் நோயினால் பாதிக்கப்படும் அபாயமுள்ளது.

உலகளவில் 180 கோடி பேர் போதிய உடல் உழைப்பு இல்லாமல் உள்ளனர். மேற்கத்திய நாடுகளில் அதிகம் வருமானம் கொண்ட நாடுகளில் 28 சதவீதம் பேர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

போதிய உடல் உழைப்பு இல்லாத பெண்கள் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் நாடுகள் உள்ளன.

அதேநேரத்தில் வங்கதேசம், பூடான் மற்றும் நேபாளத்தில் பெண்கள் உரிய உடற்தகுதியுடன் உள்ளனர் என லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வயது வந்தவர்களுக்கு வாரத்திற்கு 150 முதல் 300 நிமிடங்கள் மிதமான உடல் உழைப்பு அவசியம். இல்லாவிட்டால் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, மார்பக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.