இளைஞர்களை ஆசை வலையில் சிக்க வைக்கும் விபரீத செயலிகள்

அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில், புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கவும், வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யவும், 'டேட்டிங்' கலாசாரம் இருந்து வருகிறது.

இந்தியாவில், 2016க்கு பின், இந்த நடைமுறை வேகமாக வளர்ச்சி அடைந்தது. நல்ல நட்புடன் பழக வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட பல செயலிகள், தற்போது சிக்கலாக மாறியுள்ளன.

'நண்பர்களை தேடுங்கள்' என்ற பெயரில், இவை தவறான பாதைக்கு இளைஞர்களை இழுத்துச் செல்கின்றன.

பெண்களிடம் பேசத் தயங்குபவர்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள், தனிமையில் உள்ள ஆண்களை குறிவைக்கும் இச்செயலிகள், பணம் வசூலித்து, பெண்களிடம் பேச வைக்கின்றன.

முகம் தெரியாத பெண்களுடன் பேச, இளைஞர்கள் சில நுாறு ரூபாயிலிருந்து, லட்சக்கணக்கில் பணத்தை இழக்கின்றனர். 18 வயது ஆணும், 40 வயது பெண்ணும் எளிதாக இணைக்கப்படுகின்றனர்.

இச்செயலிகளுக்கு எவ்வித விதிமுறைகளோ, வயது வரம்புக்கான முன்னெச்சரிக்கைகளோ கிடையாது என்பது, அதிர்ச்சியளிக்கும் விஷயம்.

முன்பின் தெரியாதவர்களிடம், உடனடியாக பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. பெண்கள் பேச பணம் செலுத்த வேண்டியதில்லை; ஆனால், ஆண்கள் பெண்களிடம் பேச கட்டணம் செலுத்த வேண்டும்.

குறைந்தது, 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை என்ன வேண்டுமானாலும் பேசலாம்; எதை வேண்டுமானாலும் கேட்கலாம்.

இதற்கு வயது வரம்பும் இல்லாததால், இளைஞர்கள் பலர் மோசடி வலையில் சிக்குகின்றனர். சில கும்பல்கள், 'சிண்டிகேட்' அமைத்து, இத்தகைய செயலிகளைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபடுகின்றன.

'வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் கல்லுாரி மாணவியரிடம், போன் பேசினால் பணம் சம்பாதிக்கலாம்' என, சோஷியல் மீடியா பிரபலங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

நாளடைவில் அதிகமாக பேசினால், அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெண்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிகின்றனர். இது, 'டிஜிட்டல்' விபசாரத்துக்கு இணையாக மாறிவருகிறது.

எனவே, தமிழகத்தில் இத்தகைய செயலிகளை நீக்க, அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இல்லாவிட்டால், இளைஞர்களின் எதிர்காலம் நாசமாகும் என எச்சரித்துள்ளனர் சைபர் வல்லுநர்கள்.