மன அழுத்தத்தை போக்கும் ஏலக்காய்

சமையலில், வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காயில், கேம்பர், பைனின், யூகேலிப்டோல் உட்பட பல்வேறு எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளதால் மருத்துவத்துக்கும் பயன்படுகிறது.

மூக்கடைப்பால் அவதிப்படும் குழந்தைகளுக்கும், இது நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தால், மூக்கடைப்பு நீங்கும்.

மன அழுத்த பிரச்சினை உள்ளவர்கள், 'ஏலக்காய் டீ' குடித்தால் இயல்பு நிலைக்கு வருவர்.

நா வறட்சி, வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, மார்புச்சளி, செரிமானக் கோளாறு உட்பட பல பிரச்னைகளுக்கு, இதை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெறலாம்.

வெயிலில் அதிகம் சுற்றித்திரிந்தால், தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு 5 ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் நீரில் போட்டு காய்ச்சி, சிறிது பனை வெல்லம் போட்டு குடிக்க தலைசுற்றல் நீங்கும்.

சிறிதளவு ஏலக்காயை பொடியை, அரை டம்ளர் நீரில் கொதிக்க விட்டு, உணவு உட்கொள்வதற்கு முன், இந்நீரை குடித்தால், வாய்வு தொல்லை நீங்கி விடும்.

நெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட இது நிவாரணம் தரும்.

வாய் துர்நாற்றத்தை போக்க, ஏலக்காயை மென்று சாப்பிடலாம். சாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

இதிலுள்ள காரக்குணம் வயிற்றுப்பொருமலைக் குணமாக்கி எளிதில் ஜீரணம் ஆகும்படி தூண்டுகிறது. காலையில், தேநீர் அல்லது காபியில், ஏலக்காய் சேர்த்து அருந்தலாம்.

ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள, ஜீரணப் பிரச்னைக்கு நிவாரணம் பெறலாம்.