நீர்ச்சத்து ஏன் உடலுக்கு அவசியம்?

கோடைக்காலம் துவங்கினாலே நீர்ச்சத்து குறைபாடு வருவது பொதுவான விஷயம். அதிக வியர்வை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அதீத தாகம், வாய் உலர்ந்து போவது போன்ற அறிகுறிகள் அவ்வப்போது ஏற்படலாம்.

அறிகுறிகளுக்கு ஏற்றாற்போல நீராகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உடலில் நீர்ச்சத்து குறைந்து, உள்ளுறுப்புகளின் செயல்பாடு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உஷ்ணம் காரணமாக கழிவுநீர் அதிக அளவில் வியர்வையாக வெளியேறுவதால், கோடையில் குறைந்த அளவிலேயே சிறுநீர் வெளியேறும்; அதன் தன்மையும் வழக்கத்தை விட அடர்த்தியாக இருக்கும்.

நீர்ச்சத்து குறைபாடு நீண்ட நாட்களுக்கு இருந்தால் சிறுநீரகங்களில் பாதிப்பு வரலாம்.

வயதானவர்கள், குழந்தைகள், இணை நோய்கள், நீண்ட நாள் உடல் கோளாறுகளுக்காக தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிடுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீர்ச்சத்து குறைபாடால், ரத்தம் உறையும்போது, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் அடைபட்டு பக்கவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒரு நாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அளவு வைத்து குடிக்க முடியாது. அதற்கு அவசியமும் இல்லை. தாகம் இல்லாமல் தண்ணீர் குடிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

நம் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கவனித்து, அவரவருக்கு எந்த அளவு நீராகாரம் தேவையோ அதை எடுத்துக் கொள்ளலாம்.

உட்கார்ந்து எழுந்திருக்கும் போது தலை சுற்றுவது, தலைவலி, எல்லா நேரமும் அலுப்பாகவே இருப்பது, இதெல்லாம் நீர்ச்சத்து குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகள்.