கேரளாவில் வேகமாக பரவும் வாக்கிங் நிமோனியா...
கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளில், கடந்த சில வாரங்களாக சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
குளிர்காலத்தில் வரக்கூடிய சளி, இருமல், காய்ச்சல் என்றாலும், வழக்கத்தைவிட அதிகமான குழந்தைகள் சிகிச்சைக்கு வந்ததை அடுத்து, ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதில், அந்த குழந்தைகளுக்கு 'மைக்கோபிளாஸ்மா' எனும் பாக்டீரியாவால் நிமோனியா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது, 'வாக்கிங் நிமோனியா' என அழைக்கப்படுகிறது.
வழக்கமாக, இந்த பாக்டீரியாக்கள், 5 - 17 வயது வரையுள்ளவர்களை தாக்கும் நிலையில், தற்போது 5 வயதுக்கும் குறைவாகவுள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒருசில பகுதிகளில் பெரியவர்களுக்கும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல், தோல்களில் வெடிப்பு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா, பலருக்கும் நுரையீரல் தொற்றை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற அறிகுறிகள் 5 நாட்களுக்கு மேல் இருந்தால், அருகிலுள்ள மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபர் இருமினாலோ, தும்மினாலோ வெளியேறும் எச்சில் துளிகள் மற்றும் மூச்சுக்காற்று வாயிலாக மைக்கோபிளாஸ்மா பாக்டீரியா பரவ வாய்ப்புள்ளதால் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது.